விழுப்புரம் அருகே, பால் வேன் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை சாவு

விழுப்புரம் அருகே பால் வேன் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
விழுப்புரம் அருகே, பால் வேன் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை சாவு
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய குழந்தை மதுமிதா (வயது 1). நேற்று காலை குழந்தை மதுமிதா, தனது வீட்டின் எதிரே விளையாடி கொண்டிருந்தாள். அந்த சமயத்தில் அங்கு எரிச்சனாம்பாளையத்தில் இருந்து மேல்பாதி கிராமத்திற்கு பால்வேன் ஒன்று வந்து நின்றது.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பால் கேன்களை வேனில் ஏற்றிய டிரைவர், வேனை பின்பக்கமாக இயக்கினார். அப்போது வேனின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய மதுமிதா உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். உடனே வேனை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

இதையறிந்ததும் ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் அங்கு ஓடிவந்து வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த மதுமிதாவின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்த காண்போரின் கல்நெஞ்சையும் உருக வைப்பதாக இருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com