விழுப்புரம் அருகே, விபத்தில் காயமடைந்த போலீஸ்காரர் சாவு

விழுப்புரம் அருகே நடந்த சாலை விபத்தில் காயமடைந்த போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விழுப்புரம் அருகே, விபத்தில் காயமடைந்த போலீஸ்காரர் சாவு
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள காணை ஜோதி நகரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் வீரப்பன் (வயது 34). இவர் அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக விழுப்புரத்திற்கு சென்று விட்டு மீண்டும் காணைக்கு புறப்பட்டார். பெரும்பாக்கம் என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக் கிளில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் பின்பக்க தலையில் பலத்த காயமடைந்த வீரப்பனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருடைய மருத்துவ செலவிற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் ஒருங்கிணைந்து தங்களது சொந்த செலவில் இருந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை அவரது குடும்பத்தினருக்கு கொடுத்து உதவி செய்தனர்.

இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வீரப்பன், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே போலீஸ் அதிகாரிகள் வீரப்பனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com