விராலிமலை அருகே, கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்; 2 பேர் பலி - 3 பேர் படுகாயம்

விராலிமலை அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
விராலிமலை அருகே, கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்; 2 பேர் பலி - 3 பேர் படுகாயம்
Published on

விராலிமலை,

மதுரை மாவட்டம், பனையூரை சேர்ந்த பழனி மகன் பிரபு (வயது 36), மதுரை அய்யனார் புரத்தை சேர்ந்த சிவக்குமார் (44), சந்திரன் மகன் பிரபு (38), மோகன் (58) மற்றும் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் எற்கலை வெள்ளூரை சேர்ந்த மணிகண்டன் (45) ஆகிய 5 பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.

இவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையிலிருந்து மதுரை நோக்கி ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சந்திரன் மகன் பிரபு ஓட்டினார். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள இராசநாயக்கன்பட்டி சுங்கச்சாவடி அருகே கார் சென்றபோது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் காரில் இருந்த மணிகண்டன், பழனி மகன் பிரபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தனர்.

மேலும் காரில் இருந்த சிவக்குமார், சந்திரன் மகன் பிரபு, மோகன் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன், பிரபு ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com