நீட், ஜே.இ.இ. தேர்வை நடத்துவதில் மத்திய அரசு பிடிவாதம் பாலசாகேப் தோரட் குற்றச்சாட்டு

கொரோனாவுக்கு மத்தியில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வை நடத்துவதில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது என்று பாலசாகேப் தோரட் குற்றம்சாட்டினார்.
நீட், ஜே.இ.இ. தேர்வை நடத்துவதில் மத்திய அரசு பிடிவாதம் பாலசாகேப் தோரட் குற்றச்சாட்டு
Published on

மும்பை,

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் என்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வு மற்றும் பொறியியல் படிப்புக்கு ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வு ஆகியவற்றை நடத்துவதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது. 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து இருப்பதால், தேர்வு எழுத அவர்கள் ஆர்வமாக இருப்பதாக மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறி உள்ளார்.

இந்தநிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியினர் இந்த நுழைவு தேர்வுகளை தள்ளிவைக்க கோரி நேற்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக மும்பை ஆசாத் மைதானத்திலும் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான பாலசாகேப் தோரட் கூறியதாவது:-

நாடு கொரோனா நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் வேளையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வை நடத்துவதில் பிடிவாதமாக உள்ளது.

லட்சக்கணக்கான மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் தங்கள் உடல்நிலை குறித்தும் பாதுகாப்பு குறித்தும் கவலை கொண்டுள்ளனர். ஆனால் இந்த சூழ்நிலையிலும் மத்திய அரசு தேர்வை ஒத்திவைக்க தயாராக இல்லை.

கொரோனா பாதிப்பு 33 லட்சத்தை தொட்டுள்ள நிலையில் இந்த முடிவு மாணவர்களுக்கு எதிரானது மற்றும் மக்களுக்கு எதிரானது.

அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வு எழுத வரும்போது தேர்வு அறைக்குள் நோய் தொற்று பரவும் அபாயத்தை புறம்தள்ளிவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான், மும்பை காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் கெய்க்வாட் உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com