‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் சிக்கினார் - திருப்பத்தூரை சேர்ந்தவர்

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் திருப்பத்தூரை சேர்ந்த இடைத்தரகர் கோவிந்தராஜ் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார்.
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் சிக்கினார் - திருப்பத்தூரை சேர்ந்தவர்
Published on

தேனி,

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த டாக்டர் ஷபி என்பவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் 2 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அவர், கேரளாவை சேர்ந்த ரஷீத், வாணியம்பாடியை சேர்ந்த வேதாச்சலம் ஆகிய 2 இடைத்தரகர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், வேலூர் அருகே உள்ள திருப்பத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரும் இடைத்தரகராக செயல்பட்ட தகவலை வெளியிட்டார்.

இதையடுத்து இடைத்தரகர் கோவிந்தராஜை பிடிக்க வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு, தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், திருப்பத்தூருக்கு போலீசார் விரைந்து சென்றனர். செல்போன் செயல்பாடு மூலம் திருப்பத்தூரில் கோவிந்தராஜ் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்று அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர், நேற்று இரவு 9.30 மணியளவில் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com