கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நெல்லை போலீஸ் இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினர், உறவினர்கள் கதறல்

ராஜஸ்தானில், கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். அவரது சொந்த ஊரான சாலைப்புதூர் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நெல்லை போலீஸ் இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினர், உறவினர்கள் கதறல்
Published on

பனவடலிசத்திரம்,

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே மூவிருந்தாளி பஞ்சாயத்து சாலைப்புதூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பெரியபாண்டி. சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர், சென்னையில் நடந்த நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றார். அங்கு கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி பரிதாபமாக இறந்தார்.

இதனை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இன்ஸ்பெக்டரின் சொந்த ஊரான சாலைப்புதூர் கிராமத்தில் ஊர் மக்கள் அனைவரும் பெரியபாண்டியின் பூர்வீக வீட்டின் முன்பு கூடி சோகத்துடன் உள்ளனர். மேலும் பெரியபாண்டியின் உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் பெரியபாண்டியின் தாயார் மற்றும் சகோதரர்களிடம் ஆறுதல் கூறி வருகின்றனர்.

பெரியபாண்டியின் உடல் இன்று(வியாழக்கிழமை) சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் பெற்றோர் செல்வராஜ்-ராமாத்தாள் தம்பதியர். செல்வராஜ் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார். பெரியபாண்டி மூத்த மகன் ஆவார். இவருக்கு ஜோசப், அந்தோணிராஜ் ஆகிய 2 சகோதரர்களும், சுந்தரத்தாய், சீனித்தாய், சகுந்தலா ஆகிய 3 சகோதரிகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து அந்த ஊரிலேயே வசித்து வருகின்றனர். இவர்களது குடும்பம் விவசாய குடும்பமாகும்.

பெரியபாண்டியின் சொந்த ஊரான சாலைப்புதூரில் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடம் அமைப்பதற்காக பெரியபாண்டி தனது இடத்தை தானமாக கொடுத்துள்ளார். தற்போது அந்த இடத்தில் தான் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. எனவே பெரியபாண்டியின் நினைவாக, பள்ளிக்கூடத்துக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும், ஊர் மக்களும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com