

திருச்சி,
மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சியையும், அரங்கன் பள்ளி கொண்டுள்ள 108 திவ்ய தேசங்களில் முதன்மையான புண்ணிய பூமியாம் ஸ்ரீரங்கத்தையும் தரைவழி மார்க்கமாக இணைப்பது காவிரி பாலம். பரந்து விரிந்து கடல்போல் காட்சியளிக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது.
44 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த பாலத்தை தாங்கி நிற்கும் விரிவாக்க தூண்களில் ஏற்பட்டுள்ள இடைவெளி மற்றும் விரிசல் காரணமாக வாகன போக்குவரத்திற்கு அவ்வப்போது இடையூறு ஏற்படுகிறது. பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும்போது பாலத்தில் ஒருவித அதிர்வு ஏற்படுவதை வாகன ஓட்டிகளால் உணரமுடியும்.
இதனை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக விரிவாக்க தூண்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவை முழுமையான பலனை தரவில்லை என்கிறார்கள் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள். நவீன தொழில்நுட்ப முறையில் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த திருச்சி மாவட்ட மக்களின் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த 2018-ம் ஆண்டு பாலத்தை ஆய்வு செய்தனர். அப்போது பாலத்தை தாங்கி நிற்கும் ஆறு தூண்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கியது. அந்த பணிகள் தற்போது நிறைவு பெற்று உள்ளன. ஆனாலும் இன்னும் சில தூண்களிலும் விரிசல் ஏற்பட்டு இருப்பதால் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக ஒரு பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை புதிதாக எழுந்து உள்ளது.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறையின் திருச்சி கோட்ட பொறியாளர் வடிவேலுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
காவிரி பாலத்தை தாங்கி நிற்கும் சில தூண்கள் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு இருப்பது உண்மையே. சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையின் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த பாலம் கட்டப்பட்டு 44 ஆண்டுகள் முடிந்து விட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக இந்த பாலத்தை முழு அளவில் புனரமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. காவிரி ஆற்றுக்குள் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களில் அடிப்பகுதியிலிருந்து ஆய்வு செய்து புதிதாக புனரமைக்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர புதிதாக ஒரு பாலம் கட்டவும் திட்டமிட்டு உள்ளோம். இந்த பாலத்தின் வடிவமைப்பு தொடர்பான பணிகள் தற்போது நடந்து வருகிறது. அந்த பணிகள் நிறைவடைந்ததும் அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும். அதன் பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கும்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே பழைய பாலத்தின் அருகில் புதிதாக ஒரு பாலம் உள்ளது. இந்த பாலம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல திருச்சி-ஸ்ரீரங்கம் இடையேயும் புதிய பாலம் கட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதனை உணர்ந்து தான் புதிய பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய பாலம் கட்டுவது நீண்ட காலத்திட்டம் ஆகும். எப்போது பணிகள் தொடங்கும் என்பது பற்றி இப்போது கூற முடியாது. அதே நேரத்தில் தற்போது உள்ள பழைய பாலத்தையும் முழு அளவில் புனரமைப்பு செய்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.