

புதுச்சேரி,
புதுவை குயவர்பாளையம் பகுதியை சேர்ந்த வங்கி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக வேலைபார்த்து வந்த பெண்ணுக்கு அடுத்த மாதம் (ஜனவரி) திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி பூட்டிய வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அந்த பெண் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
புதுவையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் உருளையன்பேட்டை போலீசார் சாதாரண பிரிவில் அதாவது தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
புதுப்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். கொலையாளிகளை பிடிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால் உத்தரவின்படி போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் நியூட்டன், முத்துக்குமார், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்தோஷ் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை தனிப்படையினர் ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர்களுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை விடுவித்தனர்.