திருப்பத்தூர் அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் மர்மச்சாவு

திருப்பத்தூர் அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பத்தூர் அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் மர்மச்சாவு
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே விஷமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார். இவரது மனைவி பிரியா என்ற ஜெயலட்சுமி (24). இவர்களுக்கு கடந்த 17.2.19 அன்று திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று கண்ணன் நாட்டறம்பள்ளியில் உள்ள பிரியாவின் பெற்றோரிடம் உங்கள் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிணத்தை எடுத்து செல்லுங்கள் என கூறினார். இதனால் பிரியாவின் பெற்றோர், உறவினர்களுடன் பதறி அடித்து கொண்டு விஷமங்கலத்திற்கு ஓடி வந்தனர். அங்கு வீட்டில் பிரியா பிணமாக கிடந்தார். அதனை கண்டதும் அவரது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். பிரியா எப்படி இறந்தார்? என யாரும் கூற மறுத்துவிட்டனர்.

மருத்துவமனை முற்றுகை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு பிரியாவின் உறவினர்கள் சாவில் சந்தேகம் உள்ளது, கணவர் கண்ணனை கைது செய்யுங்கள் என பிணத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லவிடாமல் தடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர்.

அதற்குள் பிரியாவின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு பிணத்தை வாங்கி செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் பிணத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அங்கிருந்து திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து, பிரியா சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் பிணத்தை வாங்கி கொண்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனலோகன் வழக்குப்பதிவு செய்தார். திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com