புதிய புயல் எதிரொலி: நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

புதிய புயல் உருவாக உள்ளதன் எதிரொலியாக நேற்று நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
புதிய புயல் எதிரொலி: நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
Published on

நாகப்பட்டினம்,

கடந்த மாதம் 16-ந்தேதி அதிகாலையில் வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. வீடுகள் சேதம் அடைந்தன. தமிழக அரசு சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது. தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவாகும் என்றும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

புதிய புயல் உருவாக உள்ளதால் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களையும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

புயல் காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று முன்தினம் ஏற்றப்பட்டது. புதிய புயல் எதிரொலியாக நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, செருதூர், காமேஸ்வரம், விழுந்தமாவடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் கரை திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தங்களது படகுகளை நாகை கடுவையாற்று பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.


X

Daily Thanthi
www.dailythanthi.com