நெய்வேலியில், பெண் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நெய்வேலியில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெய்வேலியில், பெண் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Published on

நெய்வேலி,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அம்மன் கொல்லைமேட்டை சேர்ந்தவர் சீத்தாராமன். இவரது மகள் மணிமேகலை(வயது 26). இவர், கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிமேகலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்தார். மணிமேகலையின் மகள் அம்மன்கொல்லைமேட்டில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறாள். இதனால் மணிமேகலை வடக்குத்து என்.ஜே.வி. நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிமேகலை தனது அத்தை மகனுடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த மணிமேகலை வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். பின்னர் அவர் மீண்டும் தனது அத்தை மகனை செல்போனில் தொடர்பு கொண்டு, தான் விஷத்தை குடித்து விட்டதாக தெரிவித்து விட்டு, செல்போன் அழைப்பை துண்டித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணிமேகலையின் அத்தை மகன், நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு மணிமேகலை விஷம் குடித்தது பற்றி தெரிவித்தார். உடனே போலீசார் வடக்குத்து என்.ஜே.வி. நகரில் உள்ள மணிமேகலை தங்கியிருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக வடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com