நெய்வேலியில் துணிகரம்: ஆசிரியை வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் கொள்ளை

தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் கதவை உடைத்து ரூ.6 லட்சம் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
நெய்வேலியில் துணிகரம்: ஆசிரியை வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் கொள்ளை
Published on

நெய்வேலி,

நெய்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் கதவை உடைத்து ரூ.6 லட்சம் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கடலூர் மாவட்டம் நெய்வேலி 17-வது வட்டம் அச்சுக்கார தெருவை சேர்ந்தவர் அன்புகுமார்(வயது 53). தனியார் பள்ளி குழுமத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மலர்விழி. தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் ஐதராபாத்திலும் வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்களது உறவினர் ஒருவர் வெளிநாடு சென்றார். அவரை வழியனுப்பி வைக்க அன்புகுமார், மலர்விழி ஆகியோர் சென்னைக்கு நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு காரில் சென்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.

இரவு 11.45 மணிக்கு மேல் அவர்கள் நெய்வேலிக்கு வந்து சேர்ந்தனர். காரில் இருந்து இறங்கிய மலர்விழி வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு பூஜை அறையில் இருந்த பீரோ திறந்த நிலையிலும், அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறியும் கிடந்தன.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அன்புகுமாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர் உள்ளே வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 30 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.

மேலும் வீட்டின் பின்பக்க கதவில் அடிப்பகுதி மட்டும் உடைந்த நிலையில் இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், பின்பக்க கதவின் அடிப்பகுதியை மட்டும் உடைத்து, அதன் வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். தொடர்ந்து பீரோவின் கதவு பூட்டை உடைத்து அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு அன்புகுமார் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், இன்ஸ்பெக்டர் ரவிந்தர்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் நெய்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com