தூத்துக்குடியில் இரவில் பயங்கரம்: வாலிபர் வெட்டிக்கொலை 2 மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தூத்துக்குடியில் நேற்று இரவு வாலிபர் 2 மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இரவில் பயங்கரம்: வாலிபர் வெட்டிக்கொலை 2 மர்மநபர்களுக்கு வலைவீச்சு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி சத்யாநகரை சேர்ந்த மாடசாமி மகன் கோபி (வயது 35). இவர் நேற்று இரவு தூத்துக்குடி பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பஸ்சில் வந்தார். இரவு 9.30 மணியளவில் தூத்துக்குடியில் திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் அவர் பஸ்சில் இருந்து இறங்கினார்.

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் எதிரே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் இருந்து 2 மர்ம நபர்கள் அவரை நோக்கி ஓடி வந்தனர். திடீரென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர். பலத்த வெட்டுக்காயம் அடைந்த கோபி ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார்.

அங்கிருந்து சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபியை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாப், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபி எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com