

அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தனிநபர் இல்ல கழிவறைகள்
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் தனிநபர் இல்ல கழிவறைகள் கட்ட அரசு மானியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்கும் பழக்கத்தை அறவே ஒழித்திடவும் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2016-17-ம் நிதியாண்டில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 201 ஊராட்சிகளில் 39,561 தனிநபர் இல்ல கழிவறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 15,258 கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன.
45 கிராம ஊராட்சிகள்...
அரியலூர் மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக மாற்றிடும் வகையில், அனைத்து கிராமங்களையும் திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமங்களாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 2015-16-ம் நிதியாண்டில் 17 ஊராட்சிகள் திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமங்களாக கிராமசபை மூலம் அறிவிக்கப்பட்டன. 2016-17-ல் இதுவரை 45 கிராம ஊராட்சிகள் திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.