சட்டமன்றத்துக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது - சாமிநாதன் எம்.எல்.ஏ. உறுதி

சட்டமன்றத்துக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
சட்டமன்றத்துக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது - சாமிநாதன் எம்.எல்.ஏ. உறுதி
Published on

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரது நியமனம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் ஐகோர்ட்டின் இந்த உத்தரவு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தனக்கு வரவில்லை என்று சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார். இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவு நகலை பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் நேற்று முன்தினம் சட்டசபை செயலாளரை சந்தித்து வழங்கினார்கள்.

இந்தநிலையில் இந்த வழக்கில் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் புதுவை சட்டமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது.

ஆனால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டமன்ற செயலகத்தில் இருந்து அழைப்பு ஏதும் அனுப்பப்படவில்லை. இருக்கை ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

இதுதொடர்பாக சாமிநாதன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு நகல் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார். அதை சட்டசபை செயலாளரிடம் வழங்கிவிட்டோம்.

எங்களிடம் ஐகோர்ட்டு உத்தரவு உள்ளது. அதை எடுத்துக்கொண்டு சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்வோம். நாங்கள் கூட்டத்துக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. அதையும் மீறி தடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். எங்களுக்கு சபையில் இருக்கை ஒதுக்காவிட்டாலும் சபாநாயகர் முன்பு தரையில் அமர்வோம்.

இவ்வாறு சாமிநாதன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com