அரசியலில் யாரும் உடனடியாக ஜொலிக்க முடியாது - நடிகர் ராமராஜன் பேச்சு

உடனடியாக யாரும் அரசியலில் ஜொலித்து விடமுடியாது என்று நடிகர் ராமராஜன் கூறினார்.
அரசியலில் யாரும் உடனடியாக ஜொலிக்க முடியாது - நடிகர் ராமராஜன் பேச்சு
Published on

அரியாங்குப்பம்,

புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் அரியாங்குப்பத்தில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாநில செயலாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், நகர செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஏழைகளுக்கு ஆடுகள், தையல் எந்திரங்கள் மற்றும் வேட்டி-சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சிறப்பு அழைப்பாளர் அசோக்குமார் எம்.பி., நடிகர் ராமராஜன் ஆகியோர் வழங்கினர். இதன்பின் நடிகர் ராமராஜன் பேசியதாவது:-

அ.தி.மு.க.வை தொடங்கியவுடன் எம்.ஜி.ஆர். ஆட்சியை பிடித்து விடவில்லை. அதேபோல் ஜெயலலிதாவும் கட்சியில் சேர்ந்தவுடன் முதல்-அமைச்சராக வரவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காவும், மக்களுக்காகவும் கடுமையாக பாடுபட்டார்கள். ஆனால் தற்போது கட்சி தொடங்குபவர்கள் உடனே முதல்-அமைச்சராகி விடலாம் கனவு காண்கிறார்கள். அரசியலில் யாரும் உடனடியாக ஜொலிக்க முடியாது. திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருபவர்களுக்கு தகுந்த முன்அனுபவம் தேவை.

புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது. ஆட்சியாளர்கள் கவர்னரை குறை கூறி வருகிறார்கள். இதனால் அரசின் திட்டங்கள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் மக்களுக்கான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com