

விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட புதிய சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் வேம்பார் இடையே ரூ.1 கோடியே 15 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. அப்போது புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் தடிமன் மிகவும் குறைவாகவும், தரமற்ற முறையிலும் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெரியசாமிபுரம் பகுதி பொதுமக்கள் திரண்டு அந்த பகுதிக்கு வந்தனர்.
தரமான சாலையை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர், அந்த பணியை நிறுத்தக்கோரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலை அமைக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த விளாத்திகுளம் தாசில்தார் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் சங்கர நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரம் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, தரமான சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.