வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்

நாங்குநேரி குளங்களுக்கு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்
Published on

நாங்குநேரி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியன் கக்கன்நகர் அருகில் உள்ள நெடுங்குளம் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை தொடங்கினர். நெற்பயிர் பாதியளவுக்கு வளர்ந்துள்ளது. இந்தநிலையில் இந்த குளத்தில் தண்ணீர் முழுவதும் வற்றி விட்டது.

எனவே விவசாய நிலங்களை பாதுகாக்க பரப்பாடி, காரியகுளம், வலியநேரி, புதுக்குளம் ஆகிய குளங்கள் வழியாக நெடுங்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதேபோன்று சடையநேரி, சவளைக்காரன்குளத்திலும் தண்ணீர் குறைந்து வருகிறது. மேலும் நாங்குநேரி பகுதியில் இன்னும் சில குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அந்த குளங்களுக்கு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், நாங்குநேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட உதவி என்ஜினீயர் பாஸ்கரிடம் கேட்ட போது, தற்போது வடக்கு பச்சையாறு அணையில் 40 அடிக்கு மேல் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் மேல் குளங்களுக்கு தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கீழ்பகுதி குளங்களுக்கும் தண்ணீர் வழங்க உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com