

நாகர்கோவில்,
சொந்த ஊர்களுக்கு செல்ல நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்கள் குவிந்தனர்.
முழு அடைப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்தநிலையில் முழு ஊரடங்கால், குமரியில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், கடைகள், விடுதிகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர்.
வட மாநில தொழிலாளர்கள்
அதைத்தொடர்ந்து நேற்று இரவு நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குவிந்தனர்.
அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக, ரெயிலில் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் செல்லவேண்டிய ரெயில் இன்று மதியம் 2.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கொல்கத்தா செல்லும் சாலிமார் சிறப்பு ரெயில் ஆகும். இன்று முழு ஊரடங்கு என்பதால், ரெயில் நிலையத்துக்கு வர முடியாமல் போய் விடும் என கருதி வட மாநில தொழிலாளர்கள் நேற்றே ரெயில் நிலையத்துக்கு வந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் வடமாநில தொழிலாளர் 100-க்கும் மேற்பட்டோர், ரெயில் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.