

பெருமாநல்லூர்,
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகோபால்(வயது 48). இவர் அதே பகுதியில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து உள்ளார். அதோடு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளராகவும் இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு நந்தகோபால் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றபோது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் தன்னை வழிமறித்து கைகள் மற்றும் தோளில் கத்தியால் வெட்டியதாக கூறி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி அறிந்ததும் இந்து மக்கள் கட்சியினர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று திரண்டனர்.கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓம்கார் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து நந்தகோபால் மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
சம்பவம் பற்றி அறிந்ததும்மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா, போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் ஆகியோர் நேற்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இந்து மக்கள் கட்சி நிர்வாகி தாக்கப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும்கணக்கம்பாளையத்தில் பதற்றம் நிலவியது.
இதனால் சம்பவம் நடந்த இடத்தில் மத்திய அதிவிரைவுப்படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
நந்தகோபால் அளித்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நந்தகோபால் கட்சியில் பதவி பெற சுய விளம்பரத்துக்காக தனது கார் டிரைவரான ருத்ரமூர்த்தியுடன்(20) சேர்ந்து திட்டமிட்டு தாக்குதல் நாடகத்தை அரகேற்றியது தெரியவந்தது.