நர்சு சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்

சாவில் மர்மம் இருப்பதாக கூறி நர்சு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
நர்சு சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்
Published on

ஈரோடு,

அறச்சலூர் சில்லாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). தனியார் பஸ் டிரைவர்.

இவருக்கும், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த வல்சம்மா என்கிற வனிதாவுக்கும் (27) கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

வனிதா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு நித்திஷ் (8) என்ற மகன் உள்ளான்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் சாதத்தில் புளிக்குழம்பு ஊற்றி வனிதா சாப்பிட்டு உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்து விட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அறச்சலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு வனிதா கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வனிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த வனிதாவின் உறவினர்கள் நேற்று மாலை 4 மணி அளவில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த போலீசாரிடம் அவர்கள் கூறும்போது, வனிதாவின் சாவில் மர்மம் உள்ளது. எனவே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அவரது கணவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் வனிதாவின் உடலை பெற்றுச் செல்லுங்கள் என்றனர். அதை ஏற்றுக்கொண்ட அவர்களிடம் வனிதாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com