கள்ளக்காதலியின் கணவரை கொன்ற வழக்கு: அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, கள்ளக்காதலியின் கணவரை கொன்ற வழக்கில் அரசுப்பள்ளி ஆசிரியரை கைது செய்தனர்.
கள்ளக்காதலியின் கணவரை கொன்ற வழக்கு: அரசுப்பள்ளி ஆசிரியர் கைது
Published on

நிலக்கோட்டை,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கே.குரும்பப்பட்டியை சேர்ந்தவர் சென்றாயன் (வயது 39). விவசாயி. இவரது மனைவி வனிதா (36). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சென்றாயன் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இதற்கிடையே சென்றாயனின் தந்தை மொக்கராஜ், தனது மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுபடி நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் கடந்த 15-ந்தேதி வனிதாவிடம் விசாரணை நடத்தினர்.

இதில், வனிதாவுக்கும், அதே ஊரை சர்ந்தவரும், வத்தலக்குண்டு அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவருமான அய்யனார் (48) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதற்கு இடையூறாக இருந்ததாக சென்றாயனை 2 பேரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி, கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சென்றாயனை வனிதாவும், அய்யனாரும் சேர்ந்து கத்தியால் வெட்டியும், துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர். பின்னர் அவர் தற்கொலை செய்ததாக 2 பேரும் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வனிதாவை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அய்யனார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நிலக்கோட்டை அருகே கொம்புகாரன்பட்டி பகுதியில் அய்யனார் பதுங்கி இருப்பதாக நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அய்யனாரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com