ஆம்னி பஸ் கவிழ்ந்து ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலி

பெரம்பலூர் அருகே சென்னையில் இருந்து சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்து ராணுவ வீரர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ஆம்னி பஸ் கவிழ்ந்து ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலி
Published on

பெரம்பலூர்,

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடிக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 33 பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பெரம்பலூர் மாவட் டம் பாடாலூர் அருகே விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜெகதாம்பிகை (வயது 47), தூத்துக்குடி பாரதிநகரை சேர்ந்த முகேஷ் ராஜா (8) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி தூத்துக்குடி கணேசபுரத்தை சேர்ந்த சிவா (37) உயிரிழந்தார். ராணுவ வீரரான இவர் விடுமுறையில் மனைவியுடன் ஊருக்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்தார்.

மேலும், இந்த விபத்தில் சிவாவின் மனைவி பிரியா (30) உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com