திமிரி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் பலி

திமிரி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் பலியானார்கள்.
திமிரி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் பலி
Published on

ஆற்காடு,

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே உள்ள தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ந.வ.கிருஷ்ணன். இவர் திமிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய மகன் செல்வக்குமார் (வயது 35). இவர், திமிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக பதவி வகித்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் என்கிற கிருஷ்ணகுமார் (34). இவர் அ.தி.மு.க. மாவட்ட வர்த்தகர் அணி இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். செல்வக்குமாரும், கிருஷ்ணகுமாரும் ஆற்காட்டில் ஜவுளிக்கடை நடத்தி வந்தனர்.

நேற்று தாமரைப்பக்கத்தில் எம்.ஜி.ஆர். நினைவுநாள் நடந்தது. அதில் பங்கேற்று விட்டு ஆற்காட்டை நோக்கி இருவரும் மோட்டார்சைக்கிளில் புறப்பட்டனர். ஆற்காடு -ஆரணி சாலையில் திமிரி பாரப்பட்டி ஏரிக்கரை அருகில் வரும்போது, அந்த வழியாக எதிரே எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த ஒரு லாரி திடீரென அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

அதில் கிருஷ்ணகுமார் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செல்வக்குமார் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com