

பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி. ஜோதி. இந்த தம்பதியரின் மகன் வேல் (வயது 27). பொறியியல் பட்டதாரியான இவர், கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் தபால் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவர், நேற்று காலை மீண்டும் வேலைக்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு புறப்பட்டு சென்றார்.
பெரியபாளையம்-வெங்கல் நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அருகே பேட்டைமேடு பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வேல் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேலுவின் உடலை மீட்டு,பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கு காரணமான அடையாளம் தெரியாத லாரியை ஓட்டிச்சென்ற டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.