போளூர் அருகே மூதாட்டி அடித்துக் கொலை: 2-வது நாளாக கிராமங்கள் வெறிச்சோடின

போளூர் அருகே குழந்தை கடத்துபவர் என கருதி மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 2-வது நாளாக கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
போளூர் அருகே மூதாட்டி அடித்துக் கொலை: 2-வது நாளாக கிராமங்கள் வெறிச்சோடின
Published on

போளூர்,

குழந்தை கடத்துபவர் எனக் கருதி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குல தெய்வ கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த ருக்மணி அம்மாள் மற்றும் குடும்பத்தினரை ஊர் பொதுமக்கள் தாக்கியதில் ருக்மணி அம்மாள் பரிதாபமாக இறந்தார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போளூர் போலீசார் நேற்று முன்தினம் 23 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரை வீடு, வீடாக சென்று தேடி வருகின்றனர்.

மேலும் இதுதொடர்பாக தானியார் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை (வயது 45), ஏரிக்கொல்லைமேடு பகுதியை சேர்ந்த பழனி (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் 42 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 25 பேரை நேற்று முன்தினம் இரவு போளூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தாமோதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதில் 13 வயது சிறுவன் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் மற்றவர்களை வேலூர் ஜெயிலிலும் அடைக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து 24 பேர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து நேற்று முன்தினம் களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, தின்டிவனம், கணேசபுரம், தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், தானியார், காமாட்சிபுரம், இந்திராநகர் ஆகிய 10 கிராமங்களில் பலர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி உள்ளனர்.

இரவோடு இரவாக பலர் தங்களது வீடுகளை காலி செய்துள்ளனர். 2-வது நாளாக நேற்றும் கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு (போளூர்), ராஜகோபால் (கலசபாக்கம்), சுரேஷ்சண்முகம் (கடலாடி) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாளன், சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்களை கொண்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அப்பகுதியில் தினமும் அதிகாலை நேரத்தில் பலர் சைக்கிளில் இளநீர் கொண்டு வந்து போளூரில் விற்பனை செய்வது வழக்கம். நேற்று இளநீர் விற்பவர்கள் யாரும் வரவில்லை.

ஜவ்வாதுமலையில் உள்ள பட்டரைகாடு, நம்மியம்பட்டு உள்பட 364 குக்கிராமங்களில் அவர்கள் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து அந்த பகுதிகளில் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com