

திருவொற்றியூர்,
எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மோகன்(வயது 26). காசிமேடு புதுமனை குப்பத்தைச் சேர்ந்தவர் லியோ(28). மீனவர்களான இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்கள்.
நண்பர்கள் இருவரும் நேற்று அதிகாலையில் மீன்பிடிப்பதற்காக எண்ணூரில் இருந்து காசிமேட்டுக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். எண்ணூர் கடற்கரை சாலையில் பாரதிநகர் வந்தபோது அந்த பகுதி இருட்டாக இருந்தது.
அங்கு சாலையோரம் ஒரு கன்டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இருட்டில் லாரி நிற்பது தெரியாததால், கன்டெய்னர் லாரி மீது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் மோகன், லியோ இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான மீனவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த விஜயன்(40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.