ஊத்துக்கோட்டையில் கிருஷ்ணா கால்வாயில் கார் கவிழ்ந்து பாட்டி, பேத்தி பலி

ஊத்துக்கோட்டையில் கிருஷ்ணா கால்வாயில் கார் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.
ஊத்துக்கோட்டையில் கிருஷ்ணா கால்வாயில் கார் கவிழ்ந்து பாட்டி, பேத்தி பலி
Published on

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை எட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசபாண்டியன் (வயது 49). இவர் ஊத்துக்கோட்டை சத்திவேடு ரோட்டில் பிஸ்கெட் கடை நடத்தி வருகிறார். சென்னை வண்ணாரபேட்டையில் உள்ள இவரது உறவுக்காரரின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்க்காக முருகேசபாண்டியன் தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமி (42), மகள் வைசாலி (17), மகன் மோனீஸ்வர் (12), தாய் தெய்வானை (65), உறவினர் சீனிவாசன் (45) ஆகியோருடன் காரில் சென்னை சென்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இரவு ஊருக்கு புறப்பட்டனர். காரை முருகேசபாண்டியன் ஓட்டினார். நள்ளிரவு 1 மணியளவில் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள அம்பேத்கர்நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள கிருஷ்ணா கால்வாயில் கவிழ்ந்தது.

தற்போது கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி, போலீஸ் ஏட்டு கமல் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகேசபாண்டியன், பாக்கியலட்சுமி, மோனீஸ்வர், சீனிவாசன் ஆகியோரை காப்பாற்றினர்.

தெய்வானை, வைசாலி கால்வாயில் மூழ்கி பலியாகினர். போலீசார் தெய்வானை, வைசாலி ஆகியோரின் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com