

சேத்துப்பட்டு,
பெரணமல்லூர் அருகே உள்ள தவணி கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்குழந்தை. அவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 40). இவர்களது உறவினரான கோவிந்தசாமியின் மகன் விக்னேஷ் (22).
நேற்று முன்தினம் வள்ளியம்மாள், விக்னேஷ் ஆகிய இருவரும் மேலப்பூண்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
தவணி-நமத்தோடுக்கு இடைப்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, எதிரே பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பள்ளி வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனையடுத்து வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்தில் வள்ளியம்மாள், விக்னேஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து பெரணமல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கன்னியப்பன், ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.