மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால், லாரி மோதி பெண் பலி

மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால் நடுரோட்டில் விழுந்த பெண், லாரி மோதி பலியானார். கணவர் கண்முன்னே நடந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.
மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால், லாரி மோதி பெண் பலி
Published on

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் வீரமணி(வயது 45), எலக்ட்ரீசியன். இவர் நேற்று தனது மனைவி வசந்தாவுடன்(40) ஒரு மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பு சென்றார். பின்னர் அங்கிருந்து இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். சென்னை-கும்பகோணம் சாலையில் மேட்டுத்தெரு என்ற இடத்தில் வந்தபோது, வசந்தாவின் சேலை, மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியதாக தெரிகிறது.

இதில் வசந்தாவும், வீரமணியும் தவறி நடுரோட்டில் விழுந்து படுகாயமடைந்தனர். அந்த சமயத்தில் இவர்களுக்கு பின்னால் பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற லாரி ஒன்று வசந்தாவின் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், படுகாயமடைந்த வீரமணியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் வசந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com