சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் கோவில்களில் விசேஷ பூஜை எளிய முறையில் நடந்தது

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் எளிய முறையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் கோவில்களில் விசேஷ பூஜை எளிய முறையில் நடந்தது
Published on

காரைக்கால்,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக காரைக் கால் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்த ஆண்டு சதுர்த்தி விழா எளிமையாக நடைபெற்றது.

காரைக்காலில் பிரசித்திபெற்ற ஆற்றங்கரை விநாயகர் எனும் சித்தி விநாயகர் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் குறைந்த அளவிலான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருநள்ளாறு சனிபகவான் கோவில் யானை பிரக்ருதிக்கு சிறப்பு விநாயகர் பூஜை நடைபெற்றது. இதில் யானைக்கு பழங்கள் வழங்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பூஜையில் சிவாச்சாரியார்கள், கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பழமைவாய்ந்த கோவில்பத்து ராஜகணபதி கோவிலில் மூலவருக்கு பால், தயிர் பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு வெள்ளி அங்கி சாற்றி தீபாராதனை நடைபெற்றது. இதேபோல், காரைக்கால் மாதா கோவில் வீதி பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில், வரசக்தி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு ஆதாரதனைகள் நடைபெற்றது.

ஏம்பலத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சோமவரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏம்பலம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

இதேபோல் பாகூர் மூலநாதர் கோவில், கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில், கிருமாம்பாக்கம் முத்தாலம்மன் கோவில், பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் மற்றும் அரியாங்குப்பம், திருபுவனை, திருக்கனூர், வில்லியனூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com