காணும் பொங்கல் விழாவையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

காணும் பொங்கல் விழாவையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
காணும் பொங்கல் விழாவையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
Published on

பென்னாகரம்,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 13-ந்தேதி போகி பண்டிகையுடன் தொடங்கியது. 14-ந்தேதி வாசல் பொங்கலும், 15-ந்தேதி மாட்டு பொங்கலும் வழக்கமான உற்சாகத்துடன் விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான நேற்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுது போக்கு இடங்களான பூங்காக்கள், சினிமா தியேட்டர்களில் குவிந்தனர்.

இந்தநிலையில் காணும் பொங்கல் விழாவையொட்டி ஒகேனக்கல்லில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, மணல் திட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடும்பம், குடும்பமாக அமர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மீன் அருங்காட்சியகம், பார்வை கோபுரம், தொங்கு பாலம், நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதை ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. உணவகங்கள், மீன் வறுவல் கடைகள், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்து ஜெகன்மோகினி குகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்ததால் பஸ் நிலையம், அஞ்செட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இன்ஸ்பெக்டர் முனியசாமி தலைமையில் போலீசார், ஊர்காவல் படையினர் 100-க்கும் மேற்பட்டோர் மணல் திட்டு, ஆலாம்பாடி, மெயின் அருவி, நடைபாதை, மசாஜ் செய்யும் இடம், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தீயணைப்பு படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோன்று தர்மபுரி நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் காணும் பொங்கல் விழாவையொட்டி ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து பொழுதை கழித்தனர். நகரில் பெரும்பாலான சினிமா தியேட்டர்கள், பஸ்நிலையங்களில் மக்கள் கூட்டம் நேற்று அதிக அளவில் காணப்பட்டது. இதேபோல் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, தொப்பையாறு அணை, தீர்த்தமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் திரண்டதால் அந்த பகுதிகளில் காணும் பொங்கல் விழா களைகட்டியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com