

கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ரெட்டம்பேடு செல்லும் சாலையில் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதிமன்றம், மகளிர் மேல்நிலைப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், ரெட்டம்பேடு சாலையில் அமைந்து உள்ள அனைத்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ரெட்டம்பேடு சாலையோரம் உள்ள கால்வாய் வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கால்வாய் பணி முழுமையாக முடிவடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டதால், கால்வாய்க்கு வந்து சேரும் கழிவுநீரானது சாலையோரத்தில் குளம் போல் தேங்கி விடுகிறது
துர்நாற்றம் வீசும் இந்த கழிவுநீரை கடந்து தான் தினமும் அப்பகுதியில் உள்ள அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் சென்று வருகின்றனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் வழியில் சாலை நடுவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றிட அதிகாரிகள் முதற்கட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.