ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு; கச்சா எண்ணெய் கசிந்து ஆற்றில் கலந்ததால் பரபரப்பு

கூத்தாநல்லூர் அருகே ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்து ஆற்றில் கலந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு; கச்சா எண்ணெய் கசிந்து ஆற்றில் கலந்ததால் பரபரப்பு
Published on

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே எருக்காட்டூர் என்ற இடத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் எருக்காட்டூர் கிராமத்தையொட்டியுள்ள பாண்டவையாற்றின் குறுக்கே ஆற்றின் மணலுக்குள் குழாய் பதிக்கப்பட்டு அதன் வழியாக வெள்ளக்குடியில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள பாண்டவையாற்றில் அரசு சார்பில் ஆற்றினை தூர்வாரும் பணிக்காக பொக்லின் எந்திரம் ஆற்றுக்குள் வந்தது. அப்போது ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் எந்திரம் உரசி, குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்து ஆற்றில் பரவியது.

பரபரப்பு

கச்சா எண்ணெய் கசிந்து ஆற்றில் கலந்ததால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்த மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபி, கூத்தாநல்லூர் தாசில்தார் செல்வி, கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஐகோபால் மற்றும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com