கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 10-வது முறையாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
Published on

வெள்ளப்பெருக்கு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கார் வேட்டி நகரம் மண்டலம், அம்மபள்ளி கிராமத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. இந்த அணை உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால் ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து இரு கதவுகளை திறந்து 1,200 கன அடி தண்ணீரை வெளியேற்றினார்கள். இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் பள்ளிப்பட்டு பகுதிக்கு நேற்று அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதனால் கொசஸ்தலை ஆற்றில் கீழ்கால் பட்டடை, சாமந்தவாடா, நெடியம், சொரக்காய்பேட்டை பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் இப்பகுதி மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காக வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்த தரை பாலங்களின் இருபுறமும் வருவாய்த் துறையினரும், போலீசாரும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி விடாதபடி இரவு முழுவதும் விடிய விடிய கண்காணித்தனர். இதேபோல் திருத்தணி தாலுக்காவில் உள்ள சிவாடா, என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், நெமிலி போன்ற பகுதிகளிலும் தரைப்பாலங்கள் மீது வெள்ளம் பாய்ந்து ஓடியதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது இது 10-வது முறையாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com