‘நெக்ஸ்ட்’ தேர்வுக்கு எதிர்ப்பு; பிரதமருக்கு கடிதம் - நாராயணசாமி தகவல்

‘நெக்ஸ்ட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவேன் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
‘நெக்ஸ்ட்’ தேர்வுக்கு எதிர்ப்பு; பிரதமருக்கு கடிதம் - நாராயணசாமி தகவல்
Published on

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநில பாடத்திட்டத்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வினால் பாதிப்பு ஏற்படும் என்பதால் நீட் தேர்வினை ரத்துசெய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். புதுவை சட்டமன்றத்திலும் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் மத்திய அரசு அதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தற்போது நாடாளுமன்றத்திலும் தமிழக, புதுச்சேரி எம்.பி.க்கள் நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மத்திய அரசு தேசிய மருத்துவ கவுன்சில் அமைக்க அமைச்சரவையில் முடிவு செய்துள்ளது. அதற்கான சட்ட வரையறை தயார் செய்து தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறது. இதனால் புதுச்சேரி, தமிழக மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். தற்போது கல்வியானது மத்திய, மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளது. அதை படிப்படியாக மத்திய அரசின் பட்டியலுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதற்கு முதல்கட்ட முயற்சிதான் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டும் (நெக்ஸ்ட் தேர்வு) என்று ஒன்றை புகுத்தி உள்ளனர். 4 ஆண்டுகள் மருத்துவ படிப்பு படித்துவிட்டு அதன்பின் தேர்வு எழுத வேண்டும் என்றால் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தேவையா? என்ற கேள்வி எழும்புகிறது. எல்லா அதிகாரங்களும் மத்திய மருத்துவ கவுன்சிலுக்கே சென்று சேருகிறது.

இது ஜனநாயகத்துக்கே பேரிழப்பு. இந்த தேர்வின் மூலம் மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது. இதனை நாங்கள் எதிர்க்கிறோம். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். நீட், நெக்ஸ்ட் என்று தேர்வுகளை கொண்டு வந்து மத்திய அரசு மாணவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இந்த தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர், உள்துறை மந்திரி, மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுத உள்ளேன்.

மருத்துவ மாணவர்களுக்கு இப்போது நடத்தப்படும் தேர்வு முறையே சிறப்பாக உள்ளது. அதை மாற்றி இறுதியாண்டில் பொதுத்தேர்வு எழுதுவது என்பதை ஏற்க முடியாது. இதுகுறித்து புதுவை சட்டமன்றத்திலும் விவாதிக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com