ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலையொட்டி, வாக்குப்பெட்டிகளில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலையொட்டி வாக்கு பெட்டிகளில் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் ஆய்வு செய்தார்.
ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலையொட்டி, வாக்குப்பெட்டிகளில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
Published on

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள்நீதிமய்யம் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் 257 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக கொண்டு வரப்பட்ட வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த வாக்கு பெட்டிகளில் நேற்று சின்னம் பொருத்தும் பணி நடந்தது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்சி முகவர்களும் கலந்துகொண்டனர். அப்போது மாதிரி ஓட்டு போட்டு அதிகாரிகள் வேட்பாளர் கட்சி முகவர்களிடம் காண்பித்தனர். வாக்கு பெட்டியில் சின்னம் பொருத்தும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. அப்போது வாக்கு பெட்டியில் சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பணியின் போது மத்திய தேர்தல் பார்வையாளர் சுரேஷ்குமார், ஓட்டப்பிடாரம் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மலர்தேவன், சிவகாமிசுந்தரி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com