கடனை திருப்பி தராததால் ஆத்திரம்: காரில் கடத்தப்பட்ட வாலிபர் மீட்பு; 3 பேர் கைது

கடனை திருப்பி தராத ஆத்திரத்தில் காரில் கடத்தப்பட்ட வாலிபர் மீட்கப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடனை திருப்பி தராததால் ஆத்திரம்: காரில் கடத்தப்பட்ட வாலிபர் மீட்பு; 3 பேர் கைது
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 29). இவரும் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த சதீஷ் ஆகிய இருவரும் தொழில் ரீதியாக நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் பாலு, நண்பர் சதீஷிடம் ரூ.6 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இந்த கடனை சில நாட்களுக்கு பின்னர், சதீஷ் திருப்பி கேட்டபோது பாலு பணத்தைத் தராமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் தனது சக நண்பர்களான விக்னேஷ், நரேஷ்குமார், பிரசாத், விஷால் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 20-ந்தேதி மறைமலைநகர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பாலுவை காரில் கடத்தி சென்று பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர்.

பின்னர் பாலுவின் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள், செல்போன், ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை எடுத்து சென்றனர்.

3 பேர் கைது

இதுகுறித்து பாலுவின் உறவினர்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே இது சம்பந்தமாக மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலுவை கடத்தி சென்ற திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த நரேஷ்குமார் (30), பிரசாத் (19), விஷால் (25), ஆகிய 3 பேரையும் கைது செய்து, கடத்தப்பட்ட பாலுவை மீட்டனர்.

அவர்கள் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சதீஷ், விக்னேஷ், ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடனை திருப்பி தராத தனது நண்பரை காரில் கடத்திய சம்பவம் மறைமலைநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com