பழனி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் செல்போன் கோபுரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

பழனியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பழனி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் செல்போன் கோபுரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

பழனி,

பழனி காந்திரோட்டில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை என்பதால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் மாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் 50 அடி உயரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் பழனி டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் பழனி தீயணைப்பு படையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து செல்போன் கோபுரத்தின் மேலே ஏறி வாலிபரின் உடலை கயிறு கட்டி மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னாபுரத்தை சேர்ந்த வடிவேல் மகன் முருகன் (வயது 30) என்பது தெரியவந்தது. அவர் எதற்காக இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நகரின் மைய பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தில் நுழைந்து அங்குள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com