பழனி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம்

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
பழனி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம்
Published on

பழனி,

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. அப்போது முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தைப்பூச திருவிழா நிறைவு.

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த மாதம் 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே கடந்த 27, 28-ந்தேதிகளில் நடைபெற்றது. வெகுவிமரிசையாக நடைபெற்ற பழனி தைப்பூச திருவிழா, 10-ம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையை தெப்பக்குளத்தில் அலங்கரிப்பட்ட மண்டபத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு 6 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஓதுவார்கள் பண்பாடி மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தெப்பத்தேர்

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா... அரோகரா...' என்று சரண கோஷம் எழுப்பினர். பின்னர் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் தெப்பத்தேரில் எழுந்தருளினார். தெப்பத்தேர் 3 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தது. அப்போது வாண வேடிக்கையும் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து தெப்பத்தேர் நிறுத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பிறகு இரவு 11 மணிக்கு கொடி இறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது. தெப்ப உற்சவத்தில் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜை நிகழ்ச்சிகள் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் பழனி தெப்ப உற்சவ விழா கமிட்டி ஆகியோர் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

சாமி தரிசனம்

தைப்பூச திருவிழா நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருஆவினன்குடி, பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் காலை 6 மணி முதலே தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

இதேபோல் பாதவிநாயகர் கோவில் பகுதியில் பக்தர்கள் கூட்டத்தால் கடும் நெரிசல் காணப்பட்டது. நேற்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு 3 மணிநேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. மேலும் பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தி கிரிவீதியை சுற்றி வந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com