பள்ளிப்பட்டு நுகர்பொருள் வாணிப கிடங்கு முன் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.
பள்ளிப்பட்டு நுகர்பொருள் வாணிப கிடங்கு முன் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பொதட்டூர்பேட்டை கூட்ரோட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் இருந்து பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த கிடங்கில் லாரிகளில் மூட்டைகளை ஏற்ற காமராஜன், பெருமாள், திருமால், சின்னபையன், பொன்னுரங்கம் உள்பட 15 மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் அரசு சார்பில் 7 பேர் நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த தொழிலாளர்கள் 15 பேர் பணியாற்றுவதற்கான ஒப்பந்த காலம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது.

நேற்று வழக்கம்போல வேலைக்கு வந்த அவர்களை வேலை இல்லை என்று கூறி கிடங்கிற்கு வெளியே அனுப்பி விட்டனர். இதனால் மனவேதனை அடைந்த அந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வாணிப கிடங்கின் முன்னால் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு போலீசார் விரைந்து அந்த பகுதிக்கு சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்களது கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மாலை 3 மணியளவில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com