

பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ளது, சின்ன நாகபூண்டி கிராமம். இங்குள்ள ஓடை பாலத்தின் கீழ் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங் கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் வேலூர் மாவட்டம், சோளிங்கர் அரசு மருத்துவமனை எதிரே திருக்குளம்மேடு பகுதியில் வசிக்கும் சந்தானம் என்பவரது தம்பி ரவி (வயது 46) என்பது தெரிய வந்தது. திருமணமான இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வசித்து வந்த ரவி, மனைவி குழந்தைகளை 12 வருடங்களுக்கு முன் பிரிந்து சோளிங்கருக்கு வந்து அண்ணன் சந்தானம் வீட்டில் தங்கி வசித்து வந்து உள்ளார்.
இவர் சோளிங்கர் பஸ் நிலையத்தில் பஸ்களில் சுண்டல், போளி ஆகியவற்றை விற்று பிழைப்பு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஓடை பாலத்தின் கீழ் தலை நசுங்கிய நிலையில் ரவி பிணமாக கிடந்தார். இவரை மர்ம நபர்கள் கொலை செய்து பிணத்தை பாலத்தின் கீழ் போட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுபற்றி ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.