பள்ளிப்பட்டு-நகரி சாலையில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாய்ந்து விபத்து; ஆந்திர வாலிபர் பலி

பள்ளிப்பட்டு நகரத்தில் இருந்து நகரி செல்லும் சாலையில் மிக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாய்ந்து விபத்துக்குள்ளானதில், ஆந்திராவைச் சேர்ந்த வாலிபர் பலியானார்.
பள்ளிப்பட்டு-நகரி சாலையில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாய்ந்து விபத்து; ஆந்திர வாலிபர் பலி
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனிராமு (வயது 50).இவரது மனைவி மணிலா (45). இவர்களது மகன் ஹரிஷ் (25). இவர் நேற்று ஆந்திர மாநிலம் கார்வேட்டி நகரம் என்ற கிராமத்தில் நடந்த உறவினரது ஈமச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு பள்ளிப்பட்டு அருகே கோனேட்டம்பேட்டை கிராமத்தில் உள்ள உறவினர்களைப் பார்க்க மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நேற்று மாலை அவர், பள்ளிப்பட்டில் இருந்து நகரி செல்லும் சாலையில் மிக வேகமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் ஈச்சம்பாடி பஸ் நிறுத்தம் அருகே அவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாய்ந்தது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஹரிஷை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக செத்தார். இவரது உறவினர்களுக்கு பள்ளிப்பட்டு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com