பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் 2-ந்தேதி ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் - அதிகாரி தகவல்

பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் 2-ந் தேதி ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் 2-ந்தேதி ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் - அதிகாரி தகவல்
Published on

ராமேசுவரம்,

பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் சில இடங்களில் கடந்த 4-ந்தேதி விரிசல் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட பகுதி உடனடியாக சீரமைக்கப்பட்டாலும், தூக்குப் பாலம் முழுவதையும் சீரமைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாகவே ராமேசுவரம் ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு மீண்டும் அங்கிருந்தே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தூக்குப்பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் இரும்பு தகடுகளை அகற்றிவிட்டு புதிய தகடுகள் பொருத்தும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது பற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், பாம்பன் தூக்குப் பாலத்தில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளை விரைவாக முடித்து, வருகிற 2-ந் தேதி முதலாவதாக தனியாக என்ஜினை மட்டும் இயக்கி, அதன் பின்பு பயணிகள் இல்லாமல் ரெயிலை இயக்கி சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்த பின்பு வருகிற 5 அல்லது 6-ந் தேதிகளில் மீண்டும் பாம்பன் ரெயில் பாலம் வழியாக ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com