

திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் அருகே சேகல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சேகல் கிராமமக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். அப்போது கிராம மக்கள், சேகல் கிராமத்திற்கு குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட் டனர்.
இதனையடுத்து ஒன்றிய ஆணையர் அன்பரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனே சேகல் கிராமத்திற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.