வரதட்சணை கேட்டு பண்ருட்டி புதுப்பெண் சித்ரவதை - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

விழுப்புரத்தில் வரதட்சணை கேட்டு பண்ருட்டி புதுப்பெண்ணை சித்ரவதை செய்து வீட்டை விட்டு துரத்திய அவரது கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வரதட்சணை கேட்டு பண்ருட்டி புதுப்பெண் சித்ரவதை - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
Published on

விழுப்புரம்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா புலவனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினிதா (வயது 23). இவருக்கும் விழுப்புரம் கே.கே. சாலை வில்லியம் லே-அவுட் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன் (29) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின்போது வினிதாவின் பெற்றோர், 17 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை சரவணன் குடும்பத்திற்கு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் திருமணம் ஆன நாளில் இருந்து சரவணன் மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன்(57), தாய் பரமேஸ்வரி(55) ஆகியோர் வினிதாவிடம் மேலும் 50 பவுன் நகையை பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். மேலும் வினிதாவை திட்டி தாக்கி வீட்டை விட்டு துரத்தி விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து வினிதா, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சரவணன் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com