வில்லியனூர் அருகே பரபரப்பு: சுடுகாட்டில் குண்டு வெடித்தது தொழிலாளி படுகாயம்

வில்லியனூர் அருகே சுடுகாட்டில் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் கட்டிட தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வில்லியனூர் அருகே பரபரப்பு: சுடுகாட்டில் குண்டு வெடித்தது தொழிலாளி படுகாயம்
Published on

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே கோர்க்காடு பேட் பகுதியில் சுடுகாடு உள்ளது. இதன் பின்பகுதியில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கான வேலைகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் கட்டிடத்தின் பின்பகுதியில் அமைத்து இருந்த சவுக்கு கட்டைகளால் ஆன சாரம் திடீரென்று சரிந்து கீழே விழுந்தது.

அதை சரி செய்வதற்காக கட்டிட தொழிலாளியான குருவிநத்தத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 40), கட்டிடத்தின் பின்பகுதிக்கு சென்றார். கீழே விழுந்து கிடந்த சவுக்கு கட்டையை ஒதுக்கிய போது அங்கு மஞ்சள் பையில் வைத்திருந்த மர்மபொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

தொழிலாளி படுகாயம்

சத்தம் கேட்டு அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் ஓடிச் சென்று பார்த்த போது அங்கு வெடிகுண்டு வெடித்து தலை, காலில் படுகாயமடைந்து வெங்கடேஷ் அலறி துடித்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர்.

வெடிகுண்டு வெடித்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, தயாளன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நாட்டு வெடிகுண்டு

தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு குண்டு வெடித்த இடத்தில் கிடந்த துகள்களை சேகரித்து, ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுடுகாடு பகுதியில் பையில் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்திருந்ததும் சவுக்கு கட்டையை நகர்த்தியபோது உராய்வு ஏற்பட்டு அது வெடித்ததும் தெரியவந்தது. வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த பையில் ஒரு கத்தி மற்றும் குண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் இருந்தன.

கொலை திட்டம்

கொலை செய்யும் திட்டத்துடன் அப்பகுதியை சேர்ந்த ரவுடி கும்பல் வெடிகுண்டை தயாரித்து சுடுகாடு பகுதியில் பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் அவர்கள் யார்? எதற்காக வெடி குண்டை பதுக்கி வைத்திருந்தார்கள்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். சுடுகாட்டில் வெடிகுண்டு வெடித்து தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் அங்கு பர பரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com