பரமத்திவேலூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்

பரமத்திவேலூர் அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பரமத்திவேலூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
Published on

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா எஸ்.வாழவந்தி ஊராட்சியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த வீடுகளுக்கு சீராக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை எஸ்.வாழவந்தி ஊராட்சி நிர்வாகத்தினருக்கும், மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் புகார் அளித்திருந்தனர். அதன்பின்னரும் முறையாக குடிநீர் வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காலிக்குடங்களுடன் நாமக்கல்லில் இருந்து பாலப்பட்டி செல்லும் ரோட்டில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்கள் மூலம் அப்பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக தண்ணீர் வழங்கப்படும் என கூறியதை அடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com