

சேலம்,
சேலம் ஜாகீர் காமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மகள் தீபா (வயது 17). அங்கு உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். இவரும், போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்தனர். மகளின் காதல் பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் மகளிடம் இது படிக்கிற வயது, இந்த வயதில் காதல் தேவை இல்லை, எனவே தற்போது நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி உள்ளனர். மேலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் தீபா மனவேதனையில் இருந்தார்.
நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் யாரும் இல்லை. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனரே என்ற விரக்தியில் இருந்த தீபா, காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் பதறி போன காதலன் தீபா வீட்டிற்கு விரைந்து சென்றார்.
அப்போது வீடு உள்பக்கமாக பூட்டி கிடப்பது தெரிந்தது. இதையொட்டி அவர் அங்கிருந்தவர்களிடம், தீபா தற்கொலை செய்யப்போவதாக என்னிடம் கூறினார் என்று தெரிவித்தார். உடனே அவர்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து பார்த்த போது தீபா தூக்கில் தொங்கி கொண்டிருப்பது தெரிந்தது. உடனே அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு தீபா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று? விசாரணை நடத்தி வருகின்றனர்.