ஈவுத்தொகை வழங்கக்கோரி திருச்சி ரெயில்வே கூட்டுறவு அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் முற்றுகை

ஈவுத்தொகை வழங்கக்கோரி திருச்சி ரெயில்வே கூட்டுறவு அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
ஈவுத்தொகை வழங்கக்கோரி திருச்சி ரெயில்வே கூட்டுறவு அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் முற்றுகை
Published on

திருச்சி,

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே ரெயில்வே கூட்டுறவு கடன் நாணய சங்கத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தில் பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை வழங்கக்கோரியும், கூட்டுறவு கடன் நாணய சங்கத்தின் மீது முறைகேடு புகார்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரியும் டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம் சார்பில் ரெயில்வே கூட்டுறவு கடன் நாணய சங்கத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கத்தினர் திரண்டு வந்து ரெயில்வே கூட்டுறவு கடன் நாணய சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்களை அலுவலகத்தின் முன்பு நுழைவுவாயிலை போலீசார் பூட்டி தடுத்து நிறுத்தினர். மேலும் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் நுழைவு வாயில் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். துணை பொதுசெயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். செயல் தலைவர் ஜானகிராமன் கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் கோஷமிட்டனர்.

தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், திருச்சி ரெயில்வே கூட்டுறவு கடன் நாணய சங்கத்தில் கடந்த 2018-2019-ம் நிதி ஆண்டில் நிகர லாபத்தில் ரெயில்வே தொழிலாளர்களான பங்குதாரர்கள் 28 ஆயிரம் பேருக்கு ஈவுத்தொகை வழங்க வேண்டும். ஆனால் இதுவரை வழங்கவில்லை. ஈவுத்தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com